என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் கிரையின்ஸ் திட்டத்தில் பதிவு செய்து நல உதவிகள் பெறலாம்
- அரசின் வேளாண் திட்டமான கிரெய்ன்ஸ் வெப்சைட், ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
- நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
அரசின் வேளாண் திட்டமான கிரெய்ன்ஸ் வெப்சைட், ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம்.
நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களுடன் கிரெய்ன்ஸ் வெப்சைட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வெப்சைட்டில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை உள்பட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது.
மேலும், இந்த வலைதளத்தின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் உரிய பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். விவசாயிகள் நேரடியாக வெப்சைட்டில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்த வெப்சைட்டில் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இதனை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஒப்படைத்து, கிரெய்ன்ஸ் வெப்சைட்டில் தங்களின் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






