search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுவில் விஷம் கலந்து விவசாயிகள் 2 பேர் கொலையா?- போலீசார் விசாரணை
    X

    மதுவில் விஷம் கலந்து விவசாயிகள் 2 பேர் கொலையா?- போலீசார் விசாரணை

    • வேலுச்சாமியும், மனோகரனும் பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் சாலையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.
    • பலியான வேலுச்சாமி, மனோகரன் ஆகியோரது உடல்கள் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 56). விவசாயி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் (58) என்பவரும் நண்பர்கள்.

    நேற்று வேலுச்சாமியும், மனோகரனும் பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் சாலையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மதுகுடித்த சிறிது நேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே வேலுச்சாமி துடிதுடித்து இறந்தார். மனோகரன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரனும் பலியானார்.

    மதுகுடித்து 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில் அவர்கள் குடித்த மதுவால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் மதுவிலோ அல்லது அதனுடன் சேர்க்கப்பட்ட தண்ணீரிலோ விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    பலியான வேலுச்சாமி, மனோகரன் ஆகியோரது உடல்கள் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர்கள் எதனால் இறந்தனர் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    பலியான வேலுச்சாமி சமீபத்தில் அவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றை விற்று நிறைய பணம் வைத்துள்ளார். அந்த பணத்தை கொண்டு நண்பர்களுடன் மதுகுடித்து ஜாலியாக வலம் வந்துள்ளார்.

    தோட்டம் விற்பனை விவகாரத்தில் யாராவது வேலுச்சாமி அருந்திய மதுவில் விஷம் கலந்து அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும், இந்த சதியில் சிக்கி மனோகரனும் பலியாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக வேலுச்சாமியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×