என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜுஜுவாடி அரசுப்பள்ளிக்கு பிரபல ஆன்மீக குரு வருகை
- ஸ்ரீ வினய் குருஜி நேற்று ஓசூர் வழியாக திருச்செந்தூர் சென்றார்.
- பள்ளி கழிப்பறைக்குள் சென்று தனது கைகளாலே சுத்தம் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு அருகே கவுரிகட்டே என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ தத்தா ஆசிரம நிறுவனரும், பிரபல ஆன்மீக குருவுமான அவதூதா ஸ்ரீ வினய் குருஜி நேற்று ஓசூர் வழியாக திருச்செந்தூர் சென்றார்.
வழியில், ஓசூர் ஜுஜுவாடியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிக்கு வருகை தந்த அவர் பள்ளியை சுற்றி பார்வையிட்டார். மாணவர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதை கண்டும், பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள் என அனைத்தும் சுத்தம், சுகாதாரமாக நல்ல பராமரிக்கப்பட்டு வருவதை கண்டு பாராட்டினார்.
மேலும் இந்த பள்ளியில் பசுமைத்திட்ட செயல்பாடுகள் மற்றும் உயர்தர சுகாதார பராமரிப்பு குறித்து, தான் ஏற்கனவே அறிந்து அதனடிப்படையில் பார்வையிட வந்தததாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், திடீரென பள்ளி கழிப்பறைக்குள் சென்று தனது கைகளாலே சுத்தம் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். சுவாமிஜியின் இந்த செயல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, தனது அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து சென்றார். இந்த நிகழ்வின் போது, ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச்.ஸ்ரீதரன், நகரமைப்பு குழு தலைவர் எம்.அசோகா மற்றும் ஆசிரிய,ஆசிரியையர், உள்பட பலர் உடன் இருந்தனர்.