என் மலர்
உள்ளூர் செய்திகள்
அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்.. வெறிச்சோடிய எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
- போராட்டத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20 அலுவலர்களும், ஊராட்சி செயலர்கள் 40 பேரும் பங்கேற்றனர்
- கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இங்கு சுமார் 30 பேர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் 49 ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சி செயலர்களுக்கு பணி விதி வழங்கவேண்டும், கருவூலம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், முதற்கட்டமாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20 அலுவலர்களும், ஊராட்சி செயலர்களில் 40 பேரும் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
இப்போராட்டத்தின் காரணமாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்று நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ந.பொன்னரசு தலைமையில் வட்ட கிளை தலைவர் சுபதாஸ், துணைத் தலைவர் குமரவேல், வட்ட கிளை செயலாளர்கள் வசந்தகுமார், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.








