search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் அருகே முதியவர்  சரமாரி வெட்டிக்கொலை
    X

    காரிமங்கலம் அருகே முதியவர் சரமாரி வெட்டிக்கொலை

    • வயலில் பதுங்கி இருந்த தங்கவேல், மணியை அரிவாளை சரமாரியாக கை, கால், தலை உள்பட 10 இடங்களில் வெட்டினார்.
    • டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி அடுத்துள்ள ஜொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது65). இவருக்கு சேட்டு (46), சம்பத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (60), இவர் மணியின் உறவினர் ஆவர். தங்கவேலுக்கும், மணிக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இன்றுகாலை மணி தனது பேத்தி இந்துஜாவை இருசக்கர வாகனத்தில் பெரியாம்பட்டி நோக்கி பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது வயலில் பதுங்கி இருந்த தங்கவேல், மணி வந்த இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தங்கவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணியை சரமாரியாக கை, கால், தலை உள்பட 10 இடங்களில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த இந்துஜா அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு ஓடினார். அங்கு நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். இது பற்றி சேட்டுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறி போய் வயலில் உழுது கொண்டிருந்த டிரா க்டருடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    பின்னர் மணியின் வீட்டை நோக்கி தங்கவேல் சென்று கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் வந்த சேட்டுவை மறித்து அவரின் கால்களை வெட்டினார். இதனால் டிராக்டர் தானாக முன்னால் சென்றது. அப்போது டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கவேல் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் படுகாயம் அடைந்த சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×