என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் பூத்தேர் ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த அம்மன்
    X

    பக்தர்கள் வெள்ளத்தில் வந்த பூத்தேர்

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் பூத்தேர் ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த அம்மன்

    • கோவில் வளாகத்தில் சாமிகளுக்கு சிறப்பு பூைஜகள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மேளதாளம் முழங்க பூத்தேர் ஊர்வலம் தொடங்கியது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நேற்று பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இன்று பூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளினார். தேரில் முருகன், விநாயகர், அய்யப்பன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக எழுந்தருள நடுநாயகமாக கோட்டைமாரியம்மன் வீற்றிருந்தார். கோவில் வளாகத்தில் சாமிகளுக்கு சிறப்பு பூைஜகள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மேளதாளம் முழங்க பூத்தேர் ஊர்வலம் தொடங்கியது.

    பூத்தேர் மேற்குரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோவில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் தெரு, கிழக்குரதவீதி, தெற்குரதவீதி வழியாக வந்தது. வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் பூக்களை காணிக்கை செலுத்தும் வகையில் மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்கள் கோட்டை மாரியம்மனுக்கு மலர்களை காணிக்கையாக வழங்கி வழிபட்டனர். மேலும் பக்தர்களும் கோட்டை மாரியம்மனுக்கு பூக்களை காணிக்கையாக வழங்கினர். பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் நீந்தி வந்து அருளாசி வழங்கியது கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.

    பூத்தேர் வரும் வழியில் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பூத்தேர் கோவிலை வந்தடைந்ததும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூக்களை கொண்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர் அந்த பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

    Next Story
    ×