என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் வட மாநில தொழிலாளர்களுடன் டி.ஐ.ஜி கலந்துரையாடல்
- கடந்த சில மாதங்களாக வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் அவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
- வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கடந்த சில மாதங்களாக வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் அவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். சிலர் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற போலீஸ் துறை மூலம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, லத்துவாடி கிராமத்தில் உள்ள காவேரி கோழிப்பண்ணைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியாற்றும், வட மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர்களை அச்சமின்றி பணியாற்றிட ஆலோசனைகள் வழங்கினார். அவர்களின் குடும்பத்துடன் குரூப் போட்டே எடுத்துக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கோழிப்பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களுடன் இந்தியில் பேசி கலந்து ரையாடினார். அப்போது அவர், இங்குள்ள பணி சூழல் உங்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளதா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தனர்.
மேலும் அவர், இங்குள்ள தமிழ்நாட்டு தொழிலாளிகள் நல்ல முறையில் பழகுகிறார் களா? என்றும் கேட்டறிந்தார். அதற்கு அவர்கள், இங்குள்ள மக்கள் சகோதர-சகோதரி மனப்பாங்குடன் பழகுவதாக தெரிவித்தனர். இந்த தகவலை உங்கள் சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்துங்கள் என அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, காவேரி பீட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் செந்தில், இயக்குநர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.