என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்ற காட்சி.
கிரஷர் உரிமையாளர்கள் அதிரடி வேலை நிறுத்த அறிவிப்பு
- எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றோம். ஆனாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
- 20,000-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர்,
ஓசூரில், கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சம்பங்கி, ஓசூர் அருகே கொரட்டகிரி என்ற கிராமத்தில் ஜல்லி கிரஷர்கள் இயங்கி வருகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஒருசிலரது தூண்டுதல் பேரில், கிராமத்திற்குள் லாரிகள் வந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த 8 மாதங்களாக எங்களின் வாழ்வாதாரம் சிதைந்து விட்டது. கிராமத்திற்கு லாரிகள் வந்து செல்ல, எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றோம். ஆனாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
அமைச்சர், அதிகாரிகள் தலையிட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால், நாங்கள் நீதிமன்றத்தை அணுகினோம். நீதிமன்ற உத்தரவுப்படி, கொரட்டகிரி சாலையை திறந்து லாரிகளை கிராமத்திற்குள் இயக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
இதையடுத்து நேற்று முன்தினம் லாரிகளை இயக்க தொடங்கிபோது, ஒரு சிலரின் தூண்டுதலின்பேரில், லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் வேறு வழியின்றி நாங்கள் இன்று முதல், உடனடியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஓசூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் மூடப்பட்டு, உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் என இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 20,000-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருகிற 2-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிடில், செவ்வாய்க்கிழமை (3-ந்தேதி) அன்று, நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கொரட்டகிரி கிராமத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது சங்க துணைத்தலைவர் மது, பொருளாளர் ஆனந்த், நிர்வாகிகள் சர்வேஷ், பிரேம்நாத் உள்பட பலர் உடனிருந்தனர்.






