என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நகராட்சி கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு விவாதம்- புதிய பஸ் நிலையம் கட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு
- நகராட்சிகூட்டத்தில் 45 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது.
- மார்க்கெட்டை இடமாற்றம் செய்தாலும் நகர வளர்ச்சி இருக்கும் என்று தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.
கமிஷனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 45 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்பு தலுக்காக வைக்கப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில் பஸ் நிலையம் விரிவாக்க பணி களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக காய்கறி மார்க்கெட்டை நிரந்தரமாக நகராட்சி அலுவலகம் அருகில் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கண்ணன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் 21 பேர், நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், இதுகுறித்து கவுன்சிலர்கள் முன்பே தெரிவித்து இருக்கலாம். தற்போது பணிகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இனிமேல் எப்படி மாற்ற முடியும் என்று கூறினார்.
அப்போது தி.மு.க., கவுன்சிலர் வேல்ராஜ், பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு முன்பு கவுன்சிலர்களிடம் கருத்து கேட்டீர்களா? பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்படுவதை மற்றவர்கள் மூலமாக தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் என்று கூறினார்.
பஸ் நிலையம் இடமாற்றம் செய்தால் தான் நகர வளர்ச்சி இருக்கும் என்பது இல்லை. மார்க்கெட்டை இடமாற்றம் செய்தாலும் நகர வளர்ச்சி இருக்கும் என்று தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் தெரிவித்தார்.
அப்போது நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று 21 கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
சங்கரன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 21 கவுன்சிலர்களின் எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






