என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சாயத்து தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா
    X

    பஞ்சாயத்து தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா

    • தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் உட்பட தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
    • பஞ்சாயத்து வரவு செலவு முறையாக பராமரிக்கப்படவில்லை.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இண்டமங்கலம் பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராதிகா காசிராஜன் என்பவரும் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சங்கர் என்பவரும் இருந்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவர் மீதும் நிர்வாகம் மீதும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் மாதந்தோறும் நடக்க வேண்டிய பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கூட்டம் 1½ ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. பஞ்சாயத்து வரவு செலவு உட்பட எவ்வித கணக்குகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை

    உட்பட பல்வேறு புகார்களை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஜோதிலட்சுமி, மங்கை ராமு, தங்கமணி ரஞ்சித், வாசுகி துரை ஆகியோர் பஞ்சாயத்து நிர்வாகம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்காமல் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பஞ்சாயத்து தலைவர் ராதிகா மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை கண்டித்தனர்.

    இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து துணை தலைவர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், இண்டமங்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் குறித்து காரிமங்கலம் பிடிஓ, பஞ்சாயத்து உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிலவி வரும் சீர்கேடுகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்த தர்ணா போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×