என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விடுதி, பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள்
- இப்போட்டியை உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- மாவட்ட அளவில் தேர்வாகும் மாணவ, மாணவிகள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
விளையாட்டு விடுதி, மற்றும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது.
தேர்வு போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு பள்ளிகளில், 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில், 2023-2024-ம் ஆண்டிற்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், தேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டிற்கு தேர்வுப் போட்டிகள் நடந்தன.
இப்போட்டியை உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதில், 147 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் செய்திருந்தார். மேலும் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட அளவில் தேர்வாகும் மாணவ, மாணவிகள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.






