என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் பகுதியில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்த காட்சி.
ஆலங்குளம் பகுதியில் டெங்கு பாதிப்பு குறித்து கலெக்டர் 'திடீர்' ஆய்வு
- ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
- கலெக்டர் ரவிச்சந்திரன் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி ராஜீவ்காந்தி நகரில் கடந்த மாதம் 28-ந் தேதி பள்ளி மாணவனான பூனிஷ்(வயது 9) என்ற சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
கலெக்டர் திடீர் ஆய்வு
இந்நிலையில் தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் ரவிச்சந்திரன் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆலங்குளம் தாலுகா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்குள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி 7 ஆண்டுகளாகியும் இங்கு அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன், மகப்பேறு வசதி, செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.
டெங்கு தடுப்பு பணி
அப்போது கலெக்டர் ரவிச்சந்திரன், விரைவில் மருத்துவமனையை தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி, ஓடை மரிச்சான் கிராமங்களுக்கு சென்ற அவர் தெருக்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உடை யாம்புளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் தரத்தினை பரிசோதனை செய்தார்.மேலும் மருதம் புத்தூர் கிராமத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகள் மற்றும் புதிய பஞ்சாயத்து அலுவலகத்தைத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஆலங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், நிஷாந்த் குமார்,செயற்பொறியாளர் மற்றும் மருதம் புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, பஞ்சாயத்து செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனி ருந்தனர்.