search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சினிமா பாணியில்  ரேசன் அரிசி கடத்தல்காரனை   2 கி.மீட்டர் தூரம் விரட்டி பிடித்த போலீசார்
    X

    சினிமா பாணியில் ரேசன் அரிசி கடத்தல்காரனை 2 கி.மீட்டர் தூரம் விரட்டி பிடித்த போலீசார்

    • தலைமறைவான சத்திய மூர்த்தி மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
    • போலீசார் யுவராஜ் வடிவேல் உள்ளிட்டோர் 2 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று சத்தியமூர்த்தியை பிடித்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 34). இவர் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ரேஷன் அரிசி கடத்தியதாக சின்னகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆவின் பாலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இவரது 5 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

    தலைமறைவான சத்திய மூர்த்தி மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஐந்து வாகனங்களையும், 21 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் சத்தியமூர்த்தி, நேற்று கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டவுடன் வீட்டின் பக்கவாட்டில் குதித்து சத்தியமூர்த்தி தப்பித்தார். அவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், மூர்த்தி மற்றும் போலீசார் யுவராஜ் வடிவேல் உள்ளிட்டோர் 2 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அரிசி கடத்தல் விவகாரத்தில் அவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்த போலீசார், சத்தியமூர்த்தியை கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×