என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க குவிந்த பெற்றோர்கள்.
அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் வந்த பெற்றோர்
குமாரபாளையம்:
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கபட்டன. குமாரபாளையம் நகரில் மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன் பாளையம் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் அதன் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகளை இனிப்புகள், மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் குவிந்தனர். இது பற்றி தலைமை ஆசிரியை கவுசல்யாமணி கூறியதாவது:
எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி உள்ளது. இந்த பகுதி மட்டுமில்லாது, வெகு தொலைவில் உள்ள சானார்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், சிவசக்தி நகர், நாராயண நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள சொல்லி கேட்டு வருகின்றனர்.
30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனும் வகையில்தான் அரசு ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறது. ஆனால் எங்கள் பள்ளியில் தற்போது 724 பேர் உள்ள நிலையில், எப்படி மேலும் மாணவர்களை சேர்த்துக் கொள்வது? அவ்வாறே சேர்த்தாலும் போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






