என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- அறை தரைமட்டம்
- பட்டாசு விபத்து குறித்து அந்தப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- இரவில் நடந்த விபத்து காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள எதிர்கோட்டையை சேர்ந்தவர் இமயவர்மன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. 10-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஆலையில் இருந்த ஒரு அறையில் பட்டாசு மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.
பட்டாசு விபத்து குறித்து அந்தப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வெடி விபத்து நடந்த அறை இடிந்து தரைமட்டமானது.
இரவில் நடந்த விபத்து காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






