என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாட்லாம்பட்டி கிராமத்தில் ஒரு புதிய கட்டிடத்தில் உரிய அனுமதி இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் சப்ளை செய்த நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அனுமதியின்றி இயங்கிய குடிநீர் நிறுவனத்துக்கு தடை-உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை
- அனுமதியும் இன்றி, இரண்டு ஐந்து ரூபாய் காயின் செலுத்தினால் 20 லிட்டர் கேன் குடிநீர் என விளம்பர பதாகை வைத்து குடிநீர் கேன்கள் சப்ளை செய்வது கண்டறியப்பட்டது.
- உணவு பாதுகாப்பு உரிமம் எண் அச்சிட்டு பிறகு சப்ளை செய்யப்பட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சின்ன மாட்லாம்பட்டி கிராமத்தில் ஒரு புதிய கட்டிடத்தில் உரிய அனுமதி இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் சப்ளை செய்வதாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் மாட்லாம்பட்டி பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த கட்டிடத்தில், எந்தவித அனுமதியும் இன்றி, இரண்டு ஐந்து ரூபாய் காயின் செலுத்தினால் 20 லிட்டர் கேன் குடிநீர் என விளம்பர பதாகை வைத்து குடிநீர் கேன்கள் சப்ளை செய்வது கண்டறியப்பட்டது.
ஒரு அறையில் 20 லிட்டர் காலி கேன்கள் 50-க்கும் மேற்பட்டவை காணப்பட்டது.மேலும் கட்டிடத்தின் மேற்பகுதியில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள இரண்டு பெரிய டேங்க் உடன் ஆர்.ஓ. சிஸ்டம் அமைத்து நிலத்தடி நீரிலிருந்து நீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது அறியப்பட்டது.
கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரித்த போது ஒரு சில இடங்களில் ஒரு மற்றும் ஐந்து ரூபாய் காயின் போட்டு தண்ணீர் விற்பனை செய்வதை அறிந்து அதன் படி செய்ய முயற்சித்ததாக தெரிவித்தார்.
மேற்படி உரிமையாளருக்கு அவ்வாறு விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு தர சட்டப்படி தவறு என்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என்றால் முதலில் பொது பணித்துறை பிறகு ஐ.எஸ்.ஐ. தர சான்று அதன்பின் உணவு பாதுகாப்பு துறை உரிமம் ஆகியவற்றின் அனுமதி பெற்ற பிறகு அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம் எண் அச்சிட்டு பிறகு சப்ளை செய்யப்பட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
அதுவரை எக்காரணம் கொண்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படக்கூடாது எனத் தடை விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து 20 லிட்டர் காலி கேன்கள் அப்புறப்படுத்தியுடன், விளம்பரப் பதாகையும் அகற்றப்பட்டது.






