search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன வெங்காயம் சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகள் தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கம்
    X

    சின்ன வெங்காயம் சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகள் தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கம்

    • வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது.
    • ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    ராசிபுரம்:

    வெண்ணந்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர் மழை காரணமாக வெங்காய பயிர் திருகல் நோய் தாக்குதலுக்கு உள்ளானது. சின்ன வெங்காய பயிர், நடவு செய்து 20 முதல் 30 நாட்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல் அல்லது திருகல் நோய் ஏற்படுகிறது. பயிர் சுழற்சி முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதால் பயிரை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நல்ல வடிகால் வசதி யுள்ள நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 1 1/2 அடி உயரம் உள்ள பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் அற்ற தரமான விதைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு 1 கிலோ விதைக்கு 4 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி சேர்த்து 24 மணி நேரம் உலர விட்டு விதைக்க வேண்டும்.

    கடைசி உழவின்போது ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோவிரிடி, 1 கிலோ சூடோமோனாஸ், 5 கிலோ வேம் ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து 7 நாட்கள் நிழலில் வைத்திருந்து நிலத்தில் இட லாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும்.

    தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும் ஆகையால் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்தி விட்டு கார்பெண்டாசிம் என்ற பூஞ்சான் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×