என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒசூர் அருகே விலை கிடைக்காததால்   குட்டையில் கொட்டி அழிக்கப்பட்ட வெங்காயம்
    X

    ஒசூர் அருகே விலை கிடைக்காததால் குட்டையில் கொட்டி அழிக்கப்பட்ட வெங்காயம்

    • 50,000 ஏக்கர் நிலங்களில் காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர்.
    • நிலத்திலேயே உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்து வருகிறார்.

    சூளகிரி,

    சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் நிலவும் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி 50,000 ஏக்கர் நிலங்களில் காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக முட்டைக்கோஸ் காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.

    அதேபோன்று கொத்தமல்லி, புதினா பல ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்து சென்னை, கோவை, மதுரை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    மருத்துவ குணம் கொண்ட வெள்ளரி மற்றும் சிறிய வெங்காயம் போன்றவற்றையும் விவசாயிகள் விளைவித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். விவசாயிகள் பயிர் செய்தவுடன் நிலங்களில் வந்து வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக ஒசூரில் இருந்து தினமும் 150- க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஒசூர் அருகே சானமாவு கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் அனில்குமார் ஐந்து ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட சின்ன வெங்காயத்தை பயிர் செய்தார். அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்து வியாபாரிகள் விலைக்கு வாங்க வராததால் 700 மூட்டை சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் அவருடைய நிலத்திலேயே உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்து வருகிறார்.

    குறிப்பாக 50 கிலோ சின்ன வெங்காயம் கொண்ட ஒரு மூட்டை ஐந்தாயிரம் முதல் 8000 வரை விற்பனை ஆகி வந்தது. தற்பொழுது 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை விலைக்கு கேட்கின்றனர். இதனால் ஐந்து ஏக்கர் பயிர் செய்த விவசாயிகளுக்கு ரூ. 35 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வேளாண் துறை இந்த பகுதிக்கு தேவையான காய்கறி சேமிப்பு கிடங்குகளை அதிக அளவில் அமைக்க வேண்டும்.

    இது மட்டுமின்றி தக்காளி அதிகம் விளையும் இந்த பகுதியில் தக்காளியை சேமிப்பதற்கு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்கவும் தமிழக வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×