என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொது இடத்தில் ரேசன் கடை கட்ட வலியுறுத்தி துணை வட்டாட்சியரிடம் கிராமமக்கள் குடும்ப அட்டைகள் ஒப்படைப்பு
- பொது இடத்தில் ரேசன் கடை கட்ட வலியுறுத்தி துணை வட்டாட்சியரிடம் கிராமமக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்
- மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கோடாலி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பகுதியில் இருந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்ததால் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.
அப்போது பொதுவான இடத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் ஏற்கனவே இருந்த இடத்திலேயே ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் 247 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசால் வழங்கப்பட்ட தங்களது ரேஷன் கார்டுகளை ஜெயங்கொண்டம் தனி துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
கோடாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் மனு அளித்திருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொது இடத்தில் ரேசன் கடை கட்டாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






