என் மலர்
உள்ளூர் செய்திகள்

கங்கைகொண்டசோழபுரத்தில் தமிழக அரசு சார்பில் ஆடி திருவாதிரை விழா
- கங்கைகொண்டசோழபுரத்தில் தமிழக அரசு சார்பில் ஆடி திருவாதிரை விழா நடைபெற உள்ளது.
- முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடித்திருவாதிரை விழா-2022 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கர் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவியர் மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆவார். அரியலூர் மாவட்டம் முதல் பெரம்பலூர் மாவட்டம் வரை நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய மாமன்னர் மற்றும் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தினார். ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன் பல்வேறு நாடுகளை வென்று மிகவும் சிறப்புடன் ஆட்சி செய்தார்.
தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் சதயவிழா கொண்டாடுவதைப் போல நம் மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கும் அரசு விழா கொண்டாட வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவான ஆடித் திருவாதிரை விழாவினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா கொண்டாடப்படவில்லை.
இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமரிசையாக வருகிற 26.07.2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள விழாத் தொடர்பாக பல்வேறு பணிகளை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நமது மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து பயன்பெறும் வகையிலும் கங்கைகொண்ட சோழபுரம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சாத்தனூர் கல்மரம், தொல்லியல் ஆய்வகம் போன்ற பல்வேறு சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவிற்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
எனவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடனும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.