search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
    X

    மாணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

    • மாணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
    • மொரீசியஸ் மருத்துவக்கல்லூரி முகவரின் சேவை குறைபாடு

    அரியலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை காவலர் சாமுவேல். இவரது மகன் ரெனால்ட் ஏசுதாசன் (வயது 21). கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மொரீசியசில் உள்ள அண்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மருத்துவ படிப்பில் சேர சென்னையில் உள்ள அந்த கல்லூரியின் முகவர் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.

    பின்னர் அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன் கல்விக் கட்டணமாக ரூ.11,50,000 ஆயிரம் செலுத்தியுள்ளார். இவ்வாறு மொரிசியஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரெனால்ட் ஏசுதாசன் ஒரு ஆண்டு காலம் அங்கு படித்து விட்டு இந்த மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் தமிழகத்திற்கு திரும்பி வந்து விட்டார்.

    இதையடுத்து அவர், தாம் செலுத்திய கல்விக் கட்டணத்தையும், சமர்ப்பித்த மதிப்பெண் பட்டியல்களையும் திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்தையும் அதன் சென்னை முகவரையும் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இதுவரை கிடைக்காததால், அந்த மருத்துவக் கல்லூரி மீதும், அதன் சென்னை முகவர் மீதும், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்திருந்தார்.

    அதனை அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் விசாரித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் அவரது புகாரை விசாரிக்குமாறு உத்தரவிட்டதன் காரணமாக அடையார் காவல் நிலைய ஆய்வாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரியின் முகவர் அசல் சான்றிதழ்களை மட்டும் திருப்பி வழங்கியுள்ளார். முதலாம் ஆண்டு படிப்பிற்கான கட்டணத்தைத் தவிர மீதித் தொகையை வழங்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ரெனால்ட் ஏசுதாசன், தாம் செலுத்திய கல்விக் கட்டணம் ரூ.11,50,000 பணத்தை கல்லூரியும், அதன் முகவரும் திரும்ப வழங்க வேண்டும் என்றும், அவர்களது சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில், மாணவர் சொந்த விருப்பத்தின் பேரில் கல்லூரியை விட்டு வந்து விட்டார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மொரீசியசில் உள்ள அண்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறது.

    ஆனால், அந்த கல்லூரியின் சென்னை முகவர், மாணவரின் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்துள்ளார் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முகவர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மாணவர் ரெனால்ட் ஏசுதாசனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை நான்கு வாரத்துக்குள் கல்லூரியின் முகவராக செயல்பட்ட சென்னை முகவாண்மை அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×