search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி
    X

    அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி

    • ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.
    • நேரடியாக ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடையே உடற் தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து வருகிற 7-ந் தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு மூலமாக மாரத்தான் போட்டி தருமபுரி அரசுகலைக் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.

    17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு அரசுகலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசுகலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டு, அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 17 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடையுமாறும் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

    போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி (ஆதார்) சான்றிதழ்களை நாளை (6-ந் தேதி) மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000, 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலாரூ.1000, மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்கு பெறும் பயனாளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.

    எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியில் பங்கேற்று தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×