search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை- உடலை சூட்கேசில் எடுத்து சென்று புதைத்த அழகி கைது
    X

    விமான நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை- உடலை சூட்கேசில் எடுத்து சென்று புதைத்த அழகி கைது

    • கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்தார்.
    • தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து, சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்தனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (வயது 29). இவர், சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    ஜெயந்தன், கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி மதியம் நங்கநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். செல்லும்போது, பணி முடிந்ததும், அப்படியே சொந்த ஊரான விழுப்புரம் போய்விட்டுதான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் அதன்பிறகு ஜெயந்தன் மாயமானார். அவரது சொந்த ஊருக்கும் செல்லவில்லை. சகோதரி வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி, செல்போனில் தொடர்பு கொண்டபோது ஜெயந்தனின் செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில் பழவந்தாங்கல் போலீசார், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவைகளை வைத்து ஆய்வு நடத்தியபோது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1-ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண், முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப்பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்துச்சென்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை கூறினார்.

    இந்த கொலைக்கு, தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறினார்.

    மேலும் போலீசாரிடம் பாக்கியலட்சுமி கூறியதாவது:-

    பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த என்னை ஜெயந்தன், தாம்பரத்தில் உள்ள ஒரு விடுதியில் முதலில் சந்தித்தார். அதில் பழக்கம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் வைத்து என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டில் நான் ஜெயந்தனை விட்டு பிரிந்து விட்டேன்.

    கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்தார். அதனால் தான் அவரை கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து, சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்தனர். பழவந்தாங்கல் போலீசார் பாக்கியலட்சுமியை பெண் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தை பார்வையிட உள்ளனர்.

    பின்னர் வருவாய் துறையினர், மருத்துவக்குழு முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

    திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தில் உடலை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜெயந்தன் கொலை நடந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் அந்த மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×