search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்- வேளாண் அதிகாரி தகவல்
    X

    நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்- வேளாண் அதிகாரி தகவல்

    • பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.
    • 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 14000 ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும்.

    நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

    இதன்படி நெல்லுக்கு ப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யபடுகிறது.

    இவ்வட்டாரத்தில் தஞ்சாவூர் விரிவு, சூரக்கோட்டை, வல்லம் மற்றும் மானங்கோரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்கள் விபரத்தை உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

    நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம். உளுந்து -ஆடுதுறை 3, ஆடுதுறை 5, ஆடுதுறை 6, வம்பன் 6, வம்பன் 8

    பாசிபயிறு - ஆடுதுறை 3. கோ8 ஆகும்.

    சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதால் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது.

    எனவே பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.

    ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி உயிர்ப் பூஞ்சாணம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும்,

    சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகுப்பதத்தில் இருக்கும் போது விதைக்க வேண்டும்.

    நெல் தரிசு பயிறுவகைப்பயிர்களை பயிறுகளின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது நெல் தரிசுப்பயிரில் விதைத்த 18-20 ஆம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை செய்த 10 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லிட்டர் அளவில் தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகைகள், நெல் மறுதாம்பு பயிர மற்றும் அறுவடையின் போது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் ஆகியவை நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் கிடைக்கப்படுகிறது.

    ஏக்கருக்கு 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.

    பிறகு தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

    பூக்கும் தருணத்தில்(விதைத்த 25ம் நாள்) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் விதைத்த 40ம் நாள் மறுமுறையும் தெளிக்க வேண்டும்.

    எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும் மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×