search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டு   தமிழக அரசுக்கு எவ்வளவு இடையூறு தர முடியுமோ, அதை செய்கிறார் கவர்னர்   -கிருஷ்ணகிரியில் வைகோ கண்டனம்
    X

    மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டு தமிழக அரசுக்கு எவ்வளவு இடையூறு தர முடியுமோ, அதை செய்கிறார் கவர்னர் -கிருஷ்ணகிரியில் வைகோ கண்டனம்

    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல் துறையை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.
    • எவ்வளவு துரிதமாக செயல்பட முடியுமோ அந்த அளவில் வேகமாக தமிழக அரசு செயல் பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க. நிறுவனர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல் துறையை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. எவ்வளவு துரிதமாக செயல்பட முடியுமோ அந்த அளவில் வேகமாக தமிழக அரசு செயல் பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியை திணிப்பதே மத்திய அரசுதான். இந்தியை திணிப்பதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் தான். இங்கு இந்தி பேசுபவர்கள் வேலை செய்கின்றனர். தமிழர்களுக்கு வேலை யில்லை. அதன் வெளிப்பாடு தான் இந்திய கப்பற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது இந்தி தெரியாதா எனக் கூறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    பி.ஜே.பி. எப்படியாவது தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சிதைத்து, சகோதரத்துவத்தை சிதைத்து, கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறது. இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருக்கக்கூடிய உட்கட்சி பிரச்சனை அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. இது திராவிடமண். இங்கு திராவிட விதை அசைக்க முடியாத விருட்சமாக வளர்ந்துள்ளது. இதில் அ.தி.மு.க.பிரச்சினையை பயன்படுத்தி பா.ஜ.க. காலூன்ற முடியாது.

    அண்ணாமலை எந்த பிரச்சினையை எடுத்தாலும் பொறுப்பு இல்லாமல் பேசி வருகிறார். இங்கு உள்ள கவர்னர் மத்திய அரசின் ஏஜெண்டாக இருந்து கொண்டு தமிழக அரசுக்கு எவ்வளவு இடையூறு கொடுக்க முடியுமோ அதை கொடுத்து வருகிறார்.

    ஆந்திர எல்லையில் சுங்கச்சாவடி ஊழியர்களால் சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். தமிழக முதல்-அமைச்சர் , ஆந்திர முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறினார்.

    Next Story
    ×