என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே விபத்து சம்பவங்கள்: போதை வாலிபர்-மூதாட்டி பலி
- சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை ஓட்டிய ரமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
- மூதாட்டி தனது மருமகளுடன் சூரம்பட்டி நோக்கி சென்றபோது சக்கரத்தில் புடவை சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்
(வயது 35).
இவர் தனது மோட்டார்சைக்கிளில் புலியாண்டப்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
ரமேஷ் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். வழியில் சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை ஓட்டிய ரமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த ரமேஷை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல மற்றொரு இருசக்கர வாகன விபத்தில் நாகரசம்பட்டி அருகேயுள்ள வேலம்பட்டியை சேர்ந்த பட்டம்மாள் (68) என்ற மூதாட்டி தனது மருமகளுடன் சூரம்பட்டி நோக்கி சென்றபோது சக்கரத்தில் புடவை சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






