என் மலர்
உள்ளூர் செய்திகள்

அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை தாவிச்செல்லும் காட்சி.
பழனி அருகே குதிரையாறு அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ
- குதிரையாறு அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த காட்சி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகிய 3 அணைகள் உள்ளன. கொடைக்கானல் மற்றும் அதன் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணைகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
தற்போது கொடைக்கானலில் பெய்துவரும் கனமழை காரணமாக வரதமாநதி அணை ஏற்கனவே முழு ெகாள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்தும் கடந்த வாரம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 70 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் 60 அடி வரை தண்ணீர் உள்ளது.
தற்போது குதிரையாறு அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாயை துரத்திக் கவ்வி பிடிப்பது போன்ற வீடியோ அதில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அணைப்பகுதியை ஒட்டிய இடங்களில் யானை, மான், சிறுத்தை போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன. பெரும்பாலும் இவை வனப்பகுதியை விட்டு வெளியே வராது என்ற போதிலும் மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தை திரிவதால் இதுகுறித்து வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கொழுமம் வனச்சரக அலுவலர் செந்தில் தெரிவிக்கையில்,
அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போன்ற வீடியோ உண்மையானதுதான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளியானது. அதனை வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் இங்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.






