search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம்
    X

    தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.

    மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

    • தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
    • மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான பூமி பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-ன் கீழ்
    தமிழக அரசு ரூ.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.

    புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.

    இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாஸ்துபடி 6 லிருந்து 7 மணிக்குள் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலையில், திருக்கடையூர் மகேஷ் குருக்கள், பாலச்சந்திர சிவாச்சாரியார் ஆகியோர் பூஜை செய்ய தருமபுர ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினரும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விஜய், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×