என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை பட்டப்பகலில் எடுத்து சென்ற மர்ம நபர்
- புல்லட் வாகனம் திருடு போயிருப்பதை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார்.
- பூட்டை உடைத்து வாகனத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
ஒசூர்,
ஓசூர் அருகே உள்ள உளியாளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (25) இவர் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன் தினம் நண்பர்களோடு ஓசூர் தளி சாலையில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்ற விஜய், வழக்கம் போல அந்த கடை முன்பு தனது புல்லட் வண்டியை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாகனத்தில் ஏறி நண்பனின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பகுதிக்கு வந்தபோது கடை முன்பு நிறுத்தி இருந்த தனது 2 லட்சம் மதிப்புள்ள புல்லட் வாகனம் திருடு போயிருப்பதை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அவர் பார்த்தபோது அதில் மர்மநபர் ஒருவர் புல்லட் வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த கேமரா காட்சிகளை கொண்டு விஜய் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த வாகனத்திற்கு பைனான்ஸ் கட்டாததால், நிதி நிறுவன ஆட்கள் தான் அந்த வாகனத்தை எடுத்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.