search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டி யானை  பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம்   -வனத்துறைக்கு தெரியாமல் புதைத்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
    X

    மின்வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டி யானை பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் -வனத்துறைக்கு தெரியாமல் புதைத்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

    • யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது.
    • எல்லப்பனுக்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காடு பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி உள்ள அக்குபாய் கொட்டாயை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி.

    இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அந்த நிலத்தில் அடிக்கடி காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் நிலத்தை சுற்றிலும் எல்லப்பன் மின்வேலி அமைத்து இருந்தார். இந்த நிலையில் அந்த நிலத்திற்கு வந்த யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது.

    இதையறிந்த எல்லப்பன் தனது மகன்களுடன் சேர்ந்து குழி தோண்டி யானையை புதைத்தார். இந்த தகவல் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறையினர் நேற்று முன்தினம் அங்கு சென்றனர்.அப்போது இரவு நேரமாகி விட்டதால் யானையின் உடலை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எல்லப்பனை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று காலை அங்கு ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

    அதேபோல கோவையில் இருந்து சிறப்பு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும் அங்கு வந்தனர்.

    தொடர்ந்து பொக்லைன் மூலம் குழி தோண்டி கிரேன் மூலமாக யானையின் உடல் மேலே எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    இந்த பரிசோதனையின் முடிவில் யானை மின்வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மின்வேலி அமைத்து யானையை கொன்ற குற்றத்திற்காகவும், யானையின் உடலை புதைத்து தடயத்தை அழித்த குற்றத்திற்காக விவசாயி எல்லப்பனுக்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    Next Story
    ×