என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 6 பேர் மாயம்
- தேனியில் மாணவி உள்பட 6 பேர் மாயமானது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி 1வது வார்டு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நித்ரா (வயது 16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்த நித்ரா சம்பவத்தன்று ஸ்கூல் பேக்குடன் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தமபாளையம் 3வது வார்டு பழைய கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் கிருத்திக் செல்வா (20). இவர் சம்பவத்தன்று சர்ச்சுக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் இடையர்பாளையம் வெங்கட்ராமன் காலனியைச் சேர்ந்த சுந்தரம் மகள் திவ்யா (வயது 24). இவர் கடந்த சில மாதங்களாக பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் உள்ள சுந்தரம் வீட்டில் தங்கி இருந்தார். திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம் 4வது வார்டு இ.பி.காலனியைச் சேர்ந்த மாடசாமி மனைவி கவுசல்யா. இவர்களுக்கு சந்துரு (3), சங்கவி (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தடுப்பூசி போட்டு வருவதாக தனது மாமியாரிடம் கூறிச் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது கணவன் உத்தமபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள பாலப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னையா மகள் மீனா. இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஒட்டுப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவர் அதன் பிறகு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் முத்துலெட்சுமி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.






