என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
பழனியில் டெய்லர் படுகொலை பைனான்சியர் உள்பட 6 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
- தொழில் போட்டி காரணமாக டெய்லர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பைனான்சியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
பழனி:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த்சமந்தா(34). இவர் பழனியில் பல வருடங்களாக எம்பிராய்டரிங் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வள்ளியப்பா கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். கடந்த 21-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வீட்டில் இருந்த ஜெயந்த்சமந்தாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.
இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி சிவசக்தி அறிவுறுத்தலின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவங்களை சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயந்த்சமந்தாவின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தொழில்போட்டி காரணமாக ஜெயந்த்சமந்தா குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தர்மராஜ், அவரது நண்பரான தட்டான்குளத்தை சேர்ந்த ராமதுரை(32), ஈரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சந்தனபிரகாஷ்(22), தினேஷ்குமார்(22), நவீன்குமார்(26) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதில் தர்மராஜ் மற்றும் ராமதுரை ஆகியோர் பைனான்ஸ் தொழில் செய்து வருவதும், மற்ற 4 பேரும் இவர்களிடம் வேலை பார்த்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.