search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3.60 லட்சம் பேர் பயன்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3.60 லட்சம் பேர் பயன்

    • திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 3,63,235 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
    • 737 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளர்களின் துரித செயல்பாடு காரணமாக ஆம்புலன்சிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பொதுமக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாடு மற்றும் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ், அதிநவீன உயிர்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 3, அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 31, பச்சிளம் குழந்தைகளுக்கான அதிநவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் 2 என மொத்தம் 37 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 3,63,235 நபர்கள் பயனடைந்துள்ளனர். அதில் பிரசவ தேவைக்காக மட்டும் 1,04,209 நபர்கள், சாலை விபத்து மீட்பு மூலம் பயனடைந்தவர்கள் 79,683 நபர்கள், இதர மருத்துவ அவசர தேவைக்காக பயனடைந்தவர்கள் 1,79,343 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

    இதில் பிரசவத்திற்காக அழைத்துவரப்பட்டவர்களில் 737 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளர்களின் துரித செயல்பாடு காரணமாக ஆம்புலன்சிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது. மேலும், பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களின் அவசர மருத்துவ உதவியாளர் உதவியுடன் 796 கர்ப்பிணிகளுக்கு அவரவர் இல்லங்களிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது.

    பின்னர் தாயும், சேயும் தொடர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு மதுரை(108) திட்ட மேலாளர் பிமல்ராஜ், திண்டுக்கல் மாவட்ட(108) ஒருங்கிணைப்பாளர் சின்னமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×