search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை விரட்டி கீழே விழுந்து காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    யானை விரட்டி கீழே விழுந்து காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை

    • 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.
    • வனகாப்பாளர்கள் மகாவிஷ்ணு, பார்த்திபன், வேட்டை தடுப்பு காவலர் சூர்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.

    இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து இந்த யானைகள் வெளியேறி கிராமங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட யானைகள் கண்டகானப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர்.

    அப்போது கூட்டத்தில் குட்டியுடன் சென்ற பெண் யானை ஒன்று திரும்பி வந்து வனத்துறையினரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அப்போது கீழே விழுந்து வனகாப்பாளர்கள் மகாவிஷ்ணு, பார்த்திபன், வேட்டை தடுப்பு காவலர் சூர்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து மற்ற வனத்துறை ஊழியர்கள் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    கண்டகானப்பள்ளி கிராம பகுதியில் யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×