

மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளியில் 2-வது புத்தகத் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய இந்த புத்தகத் திருவிழாவை தமிழக அரசின் மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது:-
புத்தகத் திருவிழா நமது அறிவை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு திருவிழாவாகும். கடந்த முறை நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.50 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆகின. இம்முறை ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். 45 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளின் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் புத்தகங்கள் வாங்கி வாசித்து பயன்பெறுங்கள். மாணவ-மாணவிகளுக்கு இந்த புத்தகத் திருவிழா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், நகராட்சி தலைவர் சோழராஜன், துணைத் தலைவர் கைலாசம், தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேதுராமன், யேசுதாஸ், பி.ரமேஷ், அறிவியல் இயக்க தலைவர் அன்பரசு, அறிவியல் இயக்க பொருளாளர் பாஸ்கரன், மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர்
டி.ரெங்கையன், செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் டி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.