search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1,323 சுயஉதவி  குழுக்களின் ரூ.20.33 கோடி  கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் தகவல்
    X

    1,323 சுயஉதவி குழுக்களின் ரூ.20.33 கோடி கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் தகவல்

    • கூட்டுறவுத் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது என்றாா்.

    மூலனூர் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூரில் கூட்டுறவுத் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

    இதில் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் 1,323 சுயஉதவிக் குழுக்களுக்கு அசல் ரூ.17.92 கோடி, வட்டி ரூ.2.41 கோடி என மொத்தம் ரூ.20.33 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்து சான்றிதழ்களை வழங்கினர்.

    அப்போது அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள 1,04,870 சுயஉதவிக் குழுக்களில் உள்ள 7,70,761 மகளிருக்கு ரூ.1,549 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலமாக 1,323 சுயஉதவிக் குழுக்களின் (12,363 நபா்கள்) அசல் ரூ.17.92 கோடி, வட்டி ரூ.2.41 கோடி என மொத்தம் ரூ.20.33 கோடி அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சுயஉதவிக் குழுக்களின் பட்டியல் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அறியும் வகையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மூலனூா் பேரூராட்சித் தலைவா் மக்கள் தண்டபாணி, மூலனூா் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவா் சுமதி காா்த்திக், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் மணி, கூட்டுறவு சாா் பதிவாளா் செளமியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×