search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதலை ஏற்காத பிளஸ்-1 மாணவியை குத்திய வாலிபர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

    பள்ளி மாணவியை குத்திய கேசவன் போலீசாருக்கு பயந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் வசித்து வரும் 16 வயதான மாணவி தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இறுதித் தேர்வை நேற்று எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி பின்னர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.

    திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்தார்.

    அப்போது அவர் தன்னுடைய காதலை கூறவே, அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து உள்ளிட்ட 10 இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். இதனால் மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மணப்பாறை அருகேயுள்ள பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கேசவன் (வயது 22) என்பதும், அவர் ஏற்கனவே அந்த மாணவியை கடத்திச் சென்றது தொடர்பாக கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இருப்பினும் மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற கேசவனை போலீசார் தேடி வந்தனர்.

    இதற்கிடையே கீழ பூசாரிப்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக வந்தது. இதையடுத்து திருச்சி ரெயில்வே போலீசார் மற்றும் மணப்பாறை போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தவர் கேசவன் என்று தெரிந்தது.

    மேலும் இது தொடர்பாக கேசவனின் தந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர் வந்து பார்த்து விட்டு உறுதி செய்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவியை குத்திய கேசவன் போலீசாருக்கு பயந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×