search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    புதிய சுங்கச்சாவடிகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி-சிதம்பரம் இடையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி திறக்கப்பட்டிருப்பதும், மேலும் ஒரு சுங்கச்சாவடி நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளதும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவிலேயே அதிக சுங்கச்சாவடிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், விதிகளுக்கு முரணாக, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிது புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் அமைக்கப்படும் 4 வழிச்சாலைகளும், இரு வழிச்சாலைகளும் தனியார் மூலமாகத்தான் அமைக்கப்பட வேண்டும்; அதற்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மக்கள் நலன் கருதி சில சாலைகளை மத்திய அரசே அதன் சொந்த செலவில் அமைத்து, இலவச சாலைகளாக பராமரிக்கலாம். ஒவ்வொரு வாகனம் வாங்கப்படும்போது, அதன் விலையில் ஒரு பகுதி சாலைவரியாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலையில், சாலை மற்றும் கட்டமைப்புத் தீர்வையாக இப்போது முறையே ரூ.5, ரூ.2 வசூலிக்கப்பட்டாலும் கூட, இதற்கு முன் லிட்டருக்கு ரூ.18 வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் மூலம் கிடைத்த, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அமைக்கலாம். இதுவே மக்களுக்கு பயனளிக்கும்.

    தேசிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் என்பது மக்களை கசக்கிப் பிழிவதாக இருக்கக்கூடாது. எனவே, தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள சுங்கச்சாவடிகளையும் 60 கி.மீ.க்கு ஒன்று என்ற அளவில் அரசு முறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×