என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீரைகள்.
    X
    கீரைகள்.

    பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு: கீரைசாகுபடியில் ஈடுபட விவசாயிகள் தயக்கம்

    ஒருசில விற்பனையாளர்கள் நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கீரைக் கட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள்.

    மடத்துக்குளம்:

    மனித உடலுக்குத் தேவையான சத்துக்களை வாரி வழங்குவதில் கீரைகளுக்கு முதலிடம் உண்டு.ஆரோக்கியமான வாழ்வுக்கு தினசரி உணவில் கீரை சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இதனால் ஆண்டு முழுவதும் கீரைகளுக்கான தேவை உள்ளது.

    ஆனாலும் போதுமான விலை கிடைப்பதில்லை என்பது கீரை விவசாயிகளின் வருத்தமாக உள்ளது. இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் விவசாயிகளிடையே கீரை சாகுபடியில் ஆர்வத்தைக் குறைப்பதாக உள்ளது. இதுகுறித்து உடுமலை விவசாயிகள் கூறியதாவது:-

    தென்னை சாகுபடி செய்தால் பலன் பெற சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். கரும்பு, வாழை சாகுபடி செய்தால் பலன் பெற ஒரு ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். நெல் சாகுபடி செய்தால் பலன் பெற சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் குறுகிய காலத்தில் பலன் தருவது காய்கறிகள் மற்றும் கீரைகள் ஆகும்.

    எனவே காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் இருப்பு வைத்து விற்க முடியாத விளைபொருட்களில் கீரைகள் முதலிடத்தில் உள்ளது. இதனால் கீரை சாகுபடியில் விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது. ஆனால் கிளுவங்காட்டூர் உள்ளிட்ட ஒருசில கிராமப் பகுதிகளில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே கீரை சாகுபடி செய்து வருகின்றனர்.

    குறைந்த அளவிலான இடத்தில் பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, சுக்கட்டிக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, மணத்தக்காளி, சுக்கட்டிக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட பல வகையான கீரைகளை சாகுபடி செய்கின்றனர்.

    பொதுவாக கீரைகள் விதைத்த 22 நாளிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும்.10 சென்ட் இடம் இருந்தால் போதும் .தினசரி 150 கட்டுகள் வரை கீரை அறுவடை செய்ய முடியும்.அறுவடை செய்யப்பட்ட கீரைக் கட்டுகளை உடுமலை உழவர் சந்தை, தினசரி சந்தை போன்றவற்றில் விற்பனை செய்கிறோம்.

    இதுதவிர ஒருசில விற்பனையாளர்கள் நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கீரைக் கட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். சமீப காலங்களாக எதிர்பாராத பருவநிலை மாற்றங்களால் மகசூல் குறைவு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மேலும் அனைத்து விதமான பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்துள்ள நிலையில் பல ஆண்டுகளாகவே கீரைக்கட்டு என்றாலே அதிக பட்சம் ரூ. 10 என்ற மன நிலையிலேயே மக்கள் உள்ளனர்.மகசூல் குறையும் நேரங்களில் இந்த விலை கட்டுப்படியாகாததாகவே உள்ளது.

    இதனால் பல விவசாயிகள் கீரை சாகுபடியைக் கைவிட்டு மாற்று சாகுபடிக்கு மாறும் நிலை உள்ளது'என்று விவசாயிகள் கூறினர். அதிக வெப்பம் நிலவும் காலங்களிலும் கீரை சாகுபடி செய்ய நிழல் வலைக் குடில்கள் உதவிகரமாக இருக்கும்.மேலும் கீரை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமான சிறப்புத் திட்டங்களை வகுத்து தோட்டக்கலைத்துறை மூலம் நிழல் வலைக் குடில்கள் வழங்கி கீரை சாகுபடியை அதிகரிக்கலாம் என்றனர்.

    Next Story
    ×