search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காய்கறிகளுக்கு சீரான விலை-விவசாயிகள் நிம்மதி

    நிலத்தடி நீர் மட்டம் குறைவால் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தரத்தின் அடிப்படையில், வெண்டை கிலோ, 30-40 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மேலும், பி.ஏ.பி., பாசனத்துக்கு, மக்காச்சோளமும், மானாவாரியாக, கொத்தமல்லி, கொண்டைக்கடலை அதிக பரப்பில், சாகுபடி செய்யப்படுகிறது.

    நிலத்தடி நீர் மட்டம் குறைவால் அப்பகுதி விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டாமல், இருந்தனர்.இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், நிலத்தடி நீர் மட்டம் அப்பகுதியில் உயர்ந்தது. இதையடுத்து சிறு, குறு விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் கொத்தமல்லி தழை, பொரியல் தட்டை, தக்காளி, கத்தரி, பீட்ரூட், வெண்டை உள்ளிட்ட காய்கறி சாகுபடி பரப்பு குடிமங்கலம் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக, கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கிணறு மற்றும் போர்வெல்களில் வரத்து பாதிக்கும். எனவே, காய்கறி சாகுபடி மேற்கொள்வதில்லை. இந்தாண்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், கோடை கால மழையும் கைகொடுத்து வருவதால் அனைத்து காய்கறி சாகுபடியிலும் நல்ல விளைச்சல் உள்ளது என்றனர்.

    குடிமங்கலம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெண்டை விற்பனைக்காக உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. தரத்தின் அடிப்படையில், வெண்டை கிலோ, 30-40 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×