search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    25 வகையான சான்றிதழ்களை மாணவர்கள் எங்கிருந்தும் பெறலாம்- புதிய வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

    மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று, கல்வி இணைச்சான்று , புலப்பெயர்வு சான்று போன்ற 25 வகையான சான்றிதழ்களை நேரடியாக மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை, பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசின் பொது சேவை மையங்கள் வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும் பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    இச்சேவை வழங்கும் நிகழ்வின் தொடக்கமாக தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.எஸ்.டி.எம். சான்றை வழங்கினார். படிப்படியாக அனைத்து சேவைகளும் ஜூன் 2022க்குள் இணைய வழியில் பொது சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும்.

    ஆசிரியர்களின் நிருவாகப்பணியை குறைப்பதற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பதிவேடுகளை கணினி மயமாக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இப்பணியின் தொடக்கமாக 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன . ஆசிரியர்கள் இப்பதிவேடுகளை 2022-23ஆம் கல்வியாண்டு முதல் நேரடியாக பராமரிக்கத் தேவையில்லை, மின்பதிவேடுகளாக வைத்திருந்தால் மட்டும் போதுமானது. இதனால் ஆசிரியர்கள் தம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த இயலும். படிப்படியாக ஜூன் 2022க்குள் பிற அனைத்து பதிவேடுகளும் மின்பதிவேடுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

    ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களது பணிசார்ந்த தேவைகளை எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். இம்முறையில் ஏற்படுகின்ற சிரமங்களைக் களையும் வண்ணம் அவர்தம் கைபேசி வாயிலாக விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதனால் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

    ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளி தொடங்கவிருக்கும் நாள், செயல்படும் நாட்கள், தேர்வு, விடுமுறை தினங்கள் என அனைத்துத் தகவல்களையும் கொண்ட கால அட்டவணை பெற்றோர், மாணவர், ஆசிரியர்களின் நலனுக்கென பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான ஆசிரியர்களும் மாதந்தோறும் பெறவேண்டிய அடிப்படை, திட்டம் சார்ந்த, தன்விருப்பப் பயிற்சிகளுக்கென கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் தங்களது பயிற்சி குறித்து தெளிவாகத் தெரிந்து அதன் பயனை முழுமையாக பெறும் வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×