search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்

    காதலியை 2-வது திருமணம் செய்து மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு கார்கில் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுமிதா (வயது30). இவர்களுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்து.

    திருமணத்தின் போது சுமிதாவுக்கு 35 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாலமுருகனுக்கு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக சுமிதாவின் குடும்பத்தினர் கொடுத்தனர்.

    திருமணம் முடிந்து சில நாட்களிலேயே பாலமுருகன் விருந்து என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து விட்டு சுமிதாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

    மேலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் ஊதாரிதனமாக செலவு செய்து வந்துள்ளார்.

    இதுபற்றி சுமிதா தனது மாமனார் அய்யாவு, மாமியர் ஆண்டாள் மற்றும் நாத்தனார்கள் வள்ளி, சரளா ஆகியோரிடம் முறையிட்ட போது அவர்கள் பாலமுருகனுக்கு ஆதரவாக பேசி வந்தனர். 

    மேலும் தீபாவளி சீர்வரிசையாக கார் வாங்கி வரவேண்டும் என்று அவர்கள் சுமிதாவை சொந்தரவு செய்து வந்தனர். அப்படி கார் வாங்கி வரவில்லை என்றால் பாலமுருகன் அவரது முன்னாள் காதலியான கூட்டேரிப்பட்டை சேர்ந்த தமிழ்செல்வி என்ற சந்தியாவை 2-வது திருமணம் செய்து கொள்வார் என்று சுமிதாவை மிரட்டி வந்தனர்.

    மேலும் சுமிதாவுக்கு தெரியாமல் பாலமுருகனுக்கு தமிழ்செல்வியை 2-வது திருமணம் செய்து வைத்தனர். இதுபற்றி  அறிந்த சுமிதா தனது கணவர்-மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்கள் மற்றும் பாலமுருகனின் 2-வது மனைவி  சந்தியாவிடம் போனில் தட்டிக்கேட்ட போது அவர்கள் சுமிதாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    அதோடு சுமிதாவுக்கு அவரது பெற்றோர் கொடுத்த சீர்வரிசை பொருட்கள் சிலவற்றையும் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதுபற்றி புதுவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சுமிதா புகார் கொடுத்த போது அவர்கள் புகாரை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து சுமிதா இதுபற்றி புதுவை கோர்ட்டில் முறையிட்டார். நீதிபதி சுமிதாவின் புகாரை ஏற்று அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார்கள் மற்றும் பாலமுருகனின் 2-வது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் புதுவை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×