search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    அரக்கோணத்தில் இன்று பராமரிப்பு பணி- காட்பாடி வரை மட்டுமே 3 ரெயில்கள் இயக்கம்

    சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக ரெயில்வே துறை ஏற்கனவே அறிவித்தது.

    அதன்படி அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் பகுதிவாரியாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கனரக தொழில்நுட்ப எந்திரங்களை கொண்டு, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில் சென்னை செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்றும் இன்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டன.

    இதனால் பயணிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். இந்த ரெயில்களில் சென்னைக்கு வரும் பயணிகள் வசதிக்காக காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    3 பஸ்கள் மட்டுமே காட்பாடி ரெயில் நிலையத்தில் சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

    உடைமைகளுடன் ரெயிலில் வசதியாக வரும் பயணிகள் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வர படாத பாடுபடுகின்றனர். அவர்கள் பஸ்களில் உடமைகளை வைக்க இடமில்லாமல் திண்டாடுகின்றனர்.

    3 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் மற்ற பயணிகள் காட்பாடியில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து சென்னைக்கு பஸ்சில் செல்கின்றனர்.

    சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதேபோல வருகிற 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அப்போது கோவை இன்டர்சிட்டி, லால்பாக், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரெயில்களை சென்னை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×