என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேரோட்டம்
சூலூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம், சூலூர் காங்கயம்பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வருட ந்தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. ெதாடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தது.அதனை தொடர்ந்து சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். இந்த பக்தர்கள் முயற்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தேர் வாங்கப்பட்டிருந்தது. அந்த தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மாலையில் சுவாமி திருத்தேர் வீதி உலா நடந்தது. கரி வரதராஜ பெருமாள், தாயாருடன் காங்கேயம்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தார். அப்போது மேள, தாளங்கள் முழங்க பஜனை இசையுடன், பெண்களும், ஆண்களும் ஆடிப்பாடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story






