search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் பாளை மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட காட்சி.
    X
    காலி குடங்களுடன் பாளை மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட காட்சி.

    சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பாளை மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

    சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பாளை மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர்.
    நெல்லை:

     நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்கு உட்பட்டது 32-வது வார்டு. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக இந்த பகுதியில் சரியாக குடிநீர் வினியோகம் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

     முன்னதாக அவர்கள் பாளை பஸ் நிலையம் பகுதியில் இருந்து காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், 32-வது வார்டுக்கு உட்பட்ட ஜோதிபுரம் எரிபத்த நாயனார் தெரு, எம்.ஜி.ஆர். காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.

    எனவே உடனடியாக புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும். புதுப்பேட்டை வடக்கு தெரு, நடுத்தெரு மேல தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகிறது. 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தண்ணீர் வரவில்லை.

    இந்த வார்டில் உள்ள அனைத்து மினி சின்டெக்ஸ் தொட்டிகளும் பழுதடைந்து கிடக்கிறது. இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு ஜோதிபுரம் மைதானத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று கூறினர்.

    போராட்டம் நடத்தியவர்களிடம் பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ் மற்றும் உதவி கமிஷனர் ஜஹாங்கிர் பாஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அவர்கள் கூறினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுச்செயலாளர் சொக்கலிங்க குமார் துணைத்தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ளை பாண்டியன், மண்டல தலைவர்கள் முகமது அனஸ் ராஜா,  மாரியப்பன், ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×