என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேதம் அடைந்த கார்
டிராவல்ஸ் உரிமையாளர் கார் தீவைத்து எரிப்பு
பாகூர் அருகே டிராவல்ஸ் அதிபர் கார் தீவைத்து எரிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த சின்ன ஆராய்ச்சிக் குப்பம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி வைத்துக்கொண்டு டிரைவராகவும் இருந்து வருகிறார். இவர் சுற்றுலாவுக்கு பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் கோகுலகிருஷ்ணன் (வயது 21) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கோகுல
கிருஷ்ணன் விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 21-ந் தேதி வாசுதேவனும் அவரது மகன் கோகுலகிருஷ்ணனும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏற்காடு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் 2 பேர் வாசுதேவன் வீட்டு வாசலில் வந்து சத்தம் போட்டனர். வீட்டிலிருந்த கோகுலகிருஷ்ணனின் தாய் வளர்மதி கதவைத் திறந்து பார்த்தபோது 2 பேர் நின்று கொண்டு கோகுலகிருஷ்ணன் எங்கு இருக்கிறான் என்று மிரட்டலாக கேட்டனர்.
இதில் பயந்து போன வளர்மதி அவன் ஊருக்கு சென்று விட்டான் என்று தெரிவித்து விட்டு வீட்டின் உள்ளே சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அந்த மர்ம நபர்கள் தாங்கள் கையில் எடுத்து வந்த பெட்ரோல் கேன் மற்றும் தீபெட்டியை கொண்டு வீட்டு வாசலில் நின்றிருந்த காருக்கு தீ வைத்துவிட்டனர். சத்தம் கேட்டு வளர்மதி மற்றும் அவரது மாமியர் வெளியில் வந்து பார்த்தபோது கார் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
இதுகுறித்து வளர்மதி, பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






