என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான 3 பேரை படத்தில் காணலாம்.
புதுச்சேரியில் போதை பொருள் விற்ற வெளிநாட்டு மாணவர்கள் கைது
புதுவையில் போதை பொருள் விற்ற வெளிநாட்டு மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டி.ஜி.பி.உத்தரவின்பேரில் ஆபரேசன் விடியல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அவ்வப்போது புதுவையில் போலீசார் கஞ்சா தடுப்பு வேட்டை நடத்திவந்தனர்.
இதேபோல் நேற்று குருசுக்குப்பம் மரவாடி தெருவில் சிறு–வர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்,சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது சந்தேகப்படும் விதமாக 3 வெளிநாட்டினர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் டெல்வின் டரிமோ (வயது 29),டேவிட் மைக்கில் எலியா (26), பிரான்சிஸ் லக்கி ஓத்ரி (22) என்பது தெரியவந்தது.
இவர்களில் ஜஸ்டின் புதுவைக்கு சுற்றுலா வந்ததும்,அவர் ஆரோவில்லில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. மற்ற 2 பேர் சிதம்பரம் மற்றும் சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 11 கிராம் எடையுள்ள 30 போதை மாத்திரைகள் மற்றும் 21 எடையுள்ள 23 கொக்கைன் பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Next Story






