search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
    X
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    கெங்கையம்மன் சிரசு திருவிழா குடியாத்தம் நகரில் போக்குவரத்து மாற்றம்

    கெங்கையம்மன் சிரசு திருவிழா காரணமாக குடியாத்தம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை சிரசு ஊர்வலம் நடைபெற உள்ளது.

    கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னேற்பாடு  குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

    குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் கவுந்தரராசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டார்.

    கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன், வனவர் மாசிலாமணி, அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ மோகன், என்.கோவிந்தராஜ், நவீன்சங்கர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர்மன்ற தலைவர் சௌந்தரராசன் உள்ளிட்ட அதிகாரிகள் கெங்கையம்மன் கோயில் மற்றும் தேர் புறப்படும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:-

    கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் ஊர்வலம் மற்றும் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து 700 போலீசாரும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 500 போலீசார் என மொத்தம் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இது தவிர்த்து 200 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். திருவிழாவின் போது பக்தர்களை கண்காணிக்க கோவில் உள்ளேயும் வெளியேயும் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

    தேர் செல்லும் பகுதியில் உள்ள மின் வயர்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    திருவிழா நடைபெற உள்ள 2 நாட்களில் கனரக வாகனங்கள் குடியாத்தம் நகருக்குள் வந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது மாற்று வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    2 நாட்கள் நெரிசலை குறைக்கும் வகையில் வேலூர் மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், மேல்பட்டி ஆம்பூர் வழியாக வரும் பஸ்கள் செருவங்கி பகுதியிலுள்ள திரையரங்கம் அருகிலும், பேர்ணாம்பட்டு பகுதியிலிருந்து வரும் பஸ்கள் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெளியூரிலிருந்து சொந்த வாகனங்களில் திருவிழாவுக்கு வருபவர்கள் நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர், சித்தூர் பகுதியில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், ஆம்பூர் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் என்.எஸ்.கே. நகர் மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அங்கிருந்து கோவிலுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கு செல்பவர்கள் ஆட்டோக்கள் மூலம் செல்லலாம்.

    கெங்கையம்மன் கோவில் அருகே 200 மீட்டர் தொலைவுக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படும் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பிக்பாக்கெட் மற்றும் கூட்டத்தில் நகை திருடும் நபர்களை கண்காணித்து பிடிக்கும் வகையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணித்து வருவார்கள்.

    மேலும் பழைய குற்றவாளி களையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இத்திருவிழா அமைதியாகவும் சிறப்பாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×