என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டி வைத்து தாக்கப்பட்ட சண்முகம்
    X
    கட்டி வைத்து தாக்கப்பட்ட சண்முகம்

    ரூ.6 ஆயிரம் கடனுக்காக தொழிலாளியை கட்டி வைத்து தாக்கிய கும்பல்- வீடியோ வெளியிட்டு மனைவி புகார்

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரூ.6 ஆயிரம் கடனுக்காக தொழிலாளியை கட்டி வைத்து தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தளுவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (42). அதே பகுதியை சேர்ந்தவர் வசந்தி. இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராசாம்பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு, வசந்தியிடம் இருந்து சண்முகம் ரூ.6 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தார். இதை திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சண்முகம் சாலைப் புதூரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது காரில் தளுவம்பாளையத்தை சேர்ந்த தர்மலிங்கம், வசந்தியின் மகன் பிரவீன், மற்றும் சக்திவேல் ஆகியோர் வந்தனர். அவர்கள் சண்முகத்தை காரில் ஏற்றி கொண்டு தளுவம்பாளையம் சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் சண்முகத்திடம் வசந்தி கொடுத்த பணத்தை சிலம்பரசனிடம் இருந்து ஏன் திரும்ப வாங்கி தரவில்லை என்று கூறி அவரை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் சண்முகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சண்முகத்தின் மனைவி மாரியம்மாள் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் என் கணவர் சண்முகத்தை காரில் தூக்கிச் சென்று பிரவீன், தர்மலிங்கம் ஆகியோர் கட்டி வைத்து கயிறு, கட்டையால் தாக்கி உள்ளனர். அங்கிருந்து தப்பித்து என் கணவர் வந்து விட்டார்.

    இது குறித்து கொடுமுடி போலீசில் புகார் செய்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தோம். அங்கேயும் தர்மலிங்கம், பிரவீன் ஆகியோர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி என் கணவர் சண்முகத்தை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். எங்கு சென்றாலும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×