search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கவுண்டன்ய ஆற்றில் கடைகள் வைக்க அனுமதி

    குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கவுண்டன்ய ஆற்றில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    குடியாத்தம் தாலுகா கவுண்டன்ய ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு மாதத்துக்கு மேலாக ஆற்றில் பெரு வெள்ளம் ஓடியது.

    இதனால் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே அங்கு குடியிருந்தவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த 1,282 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    இந்தநிலையில் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று பகுதியில் சிறிய வியாபாரிகள் பொம்மை கடைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கிற்கான ரங்கராட்டினம் மற்றும் இதர கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வந்தால் மீண்டும் தொடர் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும், மண்வளம் குறித்த நிலைமை அறியாத நிலையில் ரங்கராட்டினம் போன்றவற்றை ஆற்றுப்பகுதியில் அமைத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று புறம்போக்கில் எவ்வித கடைகள் அமைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது என கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

    ஆற்றுபகுதயில் கடை வைக்க அனுமதிக்க வலியுறுத்தி விழாக்குழுவினர் மற்றும் வியாபாரிகள் கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அவர் இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதனைதொடர்ந்து குடியாத்தம் கெங்கை அம்மன் திருவிழா வின்போது கவுண்டன்யா ஆற்றுப் பகுதியில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல கெங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெறும் என கதிர் ஆனந்த் எம்.பி.தெரிவித்துள்ளார். இதனால் குடியாத்தம் திருவிழா தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

    எந்தவித மாற்றமும் இல்லாமல் குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழா வழக்கம்போல் நடைபெற ஏற்பாடு செய்த கதிர் ஆனந்த் எம்.பி.க்கு குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×